100 மில்லியன் டாலரில் ஓய்வு விடுதி கட்டிய செளதி இளவரசர் இப்போது சொகுசு சிறையில்!

பட மூலாதாரம், AFP
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால் .
கோடீஸ்வரரான அல்வலித் பின் தாலால், டிவிட்டர், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
17 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய இவர், உலக பணக்காரர்களில் ஒருவர் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது.
'அரேபியாவின் வாரன் பஃபட்' என தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் இவர்.
கிங்டம் ஹோல்டிங் எனும் முதலீட்டு நிறுவனத்தை அல்வலித் பின் தாலால் நடத்தி வருகிறார். இவர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும் செளதி பங்குச் சந்தையில், இவரது நிறுனத்தின் பங்குகள் 9.9% சரிந்தன.
பட மூலாதாரம், AFP
அரேபியாவின் வாரன் பஃபட்' என தன்னைத் தானே கூறிக்கொண்டவர் அல்வலித் பின் தாலால்
செளதியின் மிக முக்கிய முதலீட்டாளர்களில் இவரது நிறுவனமும் ஒன்றாகும். டிவிட்டர், ஆப்பிள் தவிர, நியூஸ் கார்ப், சிட்டிக்ரூப் வங்கி, ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல், லிஃப்ட் போக்குவரத்து வலை நிறுவனம் போன்றவற்றிலும் முதலீடு செய்துள்ளார்.
தனது நிறுவனத்தில் பெண்களை பணியமர்த்தியதற்காக ஏற்கனவே இவர் அறியப்பட்டவர். இவரது நிறுவனங்களில் பணிபுரியும் மூன்றில் இருவர் பெண்கள் ஆவர்.
தனது நூறு மில்லியன் டாலர் பாலைவன ஓய்வு விடுதிக்காகவும் இவர் அறியப்படுகிறார். அங்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக குள்ள மனிதர்களை இவர் பணியில் அமர்த்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து முன்பு ஹோட்டலையும், சொகுசு படகினையும் அல்வலித் பின் தாலால் வாங்கி இருக்கிறார்.
பட மூலாதாரம், Reuters
அல்வலித் பின் தாலால்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் முடிவெடுத்தபோது, அல்வாலேட் டிரம்பை தாக்கி டிவிட் செய்திருந்தார் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. இதற்கு டிரம்பும் டிவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்.
இருந்தாலும், டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனது வாழ்த்துக்களை அல்வலித் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :