உச்சிமாநாடு நடைபெற வட கொரியாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது - டிரம்ப்

உச்சிமாநாடு குறித்து வட கொரியாவுடன் `ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை` - டிரம்ப்

பட மூலாதாரம், AFP

வட கொரியா உச்சிமாநாடு மீண்டும் நடைபெறுவது குறித்த ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறலாம் அல்லது தேவைப்பட்டால் ஜூன் 12ஆம் தேதியை தாண்டியும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிவித்திருந்தார் டொனால்ட் டிரம்ப்.

"வெளிப்படையான விரோதத்தை" வட கொரியா தெரியப்படுத்தியதாக அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தார் டிரம்ப்.

பேச்சுவார்த்தை நடத்த எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக இருப்பதாக வட கொரியா தெரிவித்திருந்தது.

பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதை தென் கொரியாவும் வரவேற்றுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றால் அமெரிக்க அதிபர் வட கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடைத்துவதாக அதுவே முதல்முறையாக இருக்கும்.

இருநாட்டு தலைவர்களும் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை குறைப்பது குறித்தும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பம் உருவாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வியாழனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை "அரசியல் போலி" என வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தை சீர்குலைவதன் தொடக்கமாக இருந்தது அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். வட கொரியா என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பை விண்ணளவுக்கு உயர்த்தியவர் அவரே.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: