ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அலிபாபாவிலிருந்து அடுத்த வருடம் பதவி விலகுகிறார் ஜாக் மா

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின.

தற்போது தலைமை நிர்வாகியாக இருக்கும் டேனியல் சாங்கிடம் தனது பொறுப்பை ஒப்படைக்கவிருக்கிறார் ஜாக் மா.

உலகளவில் அதிக மதிப்புகள் கொண்ட ஒரு நிறுவனம் அலிபாபா ஆகும். ஒரு வருடத்தில் அதன் மதிப்பு இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று சாங், அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்பார் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஒரு வருட காலம் பதவி மாற்றம் சுமூகமாக நடைபெற உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா, அலிபாப நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு தொடங்கினார் பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது.

"தங்களை காட்டிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே ஆசிரியர்கள் நினைபார்கள் எனவே நானும், நிறுவனமும் திறமையான இளைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வழிசெய்வது சரியாக இருக்கும்" என தனது 54ஆவது பிறந்தாளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக் மா தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பங்குதாரர்கள் சந்திப்பு கூட்டம் வரை அவர் அலிபாபாவின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக தொடருவார்.

பட மூலாதாரம், Getty Images

அலிபாபாவின் நிரந்திர கூட்டாளியாக ஜாக் மா இருப்பார்.

ஒரு ராக் ஸ்டாரை போல் உடையணியும் வழக்கம் கொண்டுள்ள ஜாக் மா மீண்டும் பேராசிரியராகப் போவதாக தெரிவித்திருந்தார்.

"இந்த உலகம் மிகப்பெரியது ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன்" என தெரிவித்தார் ஜாக் மா.

"ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். அலிபாபா ஜாக் மாவுக்கானது மட்டுமல்ல ஆனால் ஜாக் மா எப்போதும் அலிபாபாவுக்காக இருப்பார்" என ஜாக் மா மேலும் தெரிவித்தார்.

11 வருடங்களாக அலிபாபாவின் நிர்வாக தலைவராக இருக்கும் ஜாக் மா "சிறந்த திறமையை" வெளிப்படுத்தியுள்ளார் என்று புதிதாக பதவியேற்க இருக்கும் சாங் தெரிவித்துள்ளார்.

ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான சீன பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் ஜாக் மா இருப்பினும் ஒருமுறை ப்ளூம்பெர்க் ஊடக நேர்காணல் ஒன்றில் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய தனக்கு நேரமில்லை என்று கூறியிருந்தார் அவர்.

ஆங்ஷூவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராராசிரியாக இருந்த ஜாக் மா, அதே நகரில் இருந்த தனது வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார்.

ஜாக் மா குறித்த ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.

1. ஆங்கில ஆசிரியர்

சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜாக் மா தனது தொழில்முறை வாழ்க்கையை ஓர் ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார்.

பட மூலாதாரம், Getty Images

கணினி நிரல் மொழிகள் குறித்த அறிவு எதுவும் இல்லாமலே 1990களில், நண்பர்களின் உதவியோடு அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார்.

2. மிகவும் செல்வந்தர்

2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்.

அவரது சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்.

அலிபாபா நிறுவனத்தின் 9% பங்குகள் இவர் வசம் உள்ளன. இவற்றின் மதிப்பு 420 பில்லியன் அமெரிக்க டாலர்.

3. ஜாக் மா பவுண்டேஷன்

ஜாக் மா பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்ய விரும்புவதாக 2013இல் அலிபாபாவின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியபோது அவர் கூறியிருந்தார்.

சீனாவில் கிராமப்புறக் கல்வியை மேம்படுத்த ஜாக் மா பவுண்டேஷன் 30 மில்லியன் டாலர் அளிப்பதாக உறுதியளித்தது.

4. டிரம்ப் பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டொனல்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில நாட்கள் முன்பு ஜாக் மாவை சந்தித்தார்.

அப்போது "அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளையும் நேசிக்கும் மிகச்சிறந்த தொழில் அதிபர்," என்று டிரம்ப் இவரைப் பாராட்டினார்.

5. எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்புவார்

பட மூலாதாரம், AFP

2017இல் நடந்த அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில், 'திரில்லர்' (Thriller) இசைத் தொகுப்பில் மைக்கேல் ஜேக்சன் அணிந்திருந்த உடையுடன் தோன்றினார் ஜாக் மா.

கடந்த ஆண்டு கோங் ஷோ தாவோ (Gong Shou Dao) எனும் குங்-பூ குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக தாய்-சி எனும் சீன தற்காப்பு கலையை பயிற்சி செய்து வருகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :