ஒமிக்ரான் திரிபு: எவ்வளவு பெரிய ஆபத்து? எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?

  • ஜேம்ஸ் காலேகர்
  • அறிவியல் & சுகாதார செய்தியாளர்
ஒமிக்ரான்

பட மூலாதாரம், Getty Images

ஒமிக்ரான் குறித்து மக்களிடையே அதிகமாக இரண்டு கேள்விகள் எழுகின்றன.

அவை,

  • ஒமிக்ரான் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?
  • எவ்வளவு அதிகமாக நோயுறச் செய்கிறது?

அவற்றைப் புரிந்துகொண்டால், ஒமிக்ரான் அச்சுறுத்தலையும் சவாலையும் புரிந்துகொள்ள முடியும்.

உலகம் முழுவதுமுள்ள ஆய்வாளர்கள் இப்போது அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் முக்கியமானது. பெருந்தொற்றின் தொடக்கத்திற்கே மீண்டும் நம்மை அழைத்துச் செல்ல ஒமிக்ரான் வரவில்லை. ஆனால், தற்போது ஒரு குழப்பமான சூழலுக்கு ஒமிக்ரான் வித்திடுகிறது. ஒமிக்ரான் குறித்த உறுதியான பதில்கள் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

ஒமிக்ரான், எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?

ஒமிக்ரான் மிகவும் வேகமாகவே பரவுவதாகத் தெரிகிறது.

பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அல்லது முந்தைய பெரிய அலையின் காரணமாக, நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகியுள்ள இடங்களிலும்கூட, இது பாதிக்கிறது.

தென்னாப்பிரிக்கா அதன் டெல்டா அலையின் முடிவை ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அடைந்தது. நாளொன்றுக்குச் சராசரியாக 300 கொரோனா நோயாளிகள் என்ற அளவுக்கு பாதிப்பின் தீவிரம் குறைந்தது. ஆனால், தற்போது அதுவே, நாளொன்றுக்கு 10,000 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் நான்காவது அலையை உண்டாக்கக்கூடிய உந்து சக்தியாக இருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள், ஒமிக்ரானுக்கான கோவிட் சோதனைகளில் விட்டுச் செல்லும் அசாதாரண தடங்களின் வழியே கண்காணித்தார்கள். இது எஸ்-ஜீன் டிராப் அவுட் (S-gene dropout) என அழைக்கப்படுகிறது. கடந்த நவம்பரின் பிற்பகுதியில் கிடைத்த பரிசோதனை முடிவுகளில், 0.1 விழுக்காடு மட்டுமே இந்தத் தடம் இருந்தது. ஆனால், இப்போது 5 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. இது ஒரு நாளைக்குச் சுமார் 2,500 பேர் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரானின் பரவல் வேகத்தை அளவிடுவதில், அதன் மாறுபாட்ட புள்ளிவிவரங்களைக் கண்டறிய, இது துல்லியமான வழியில்லை. ஆனால், நச்சுயிரி மாதிரிகளின் முழு மரபணு பகுப்பாய்வுக்காக காத்திருக்காமல் விரைவான மதிப்பீட்டை உருவாக்க இது உதவுகிறது.

ஒமிக்ரான் பரவல், இன்னமும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளதால், ஒமிக்ரான் பாதிப்புகள் பிரிட்டனில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் இரண்டு மடங்காக இருக்கலாம் என்று அந்த ஆரம்பக்கட்ட கணக்கீடுகள் கூறுகின்றன.

இது இங்கிலாந்திலுள்ள டெல்டா திரிபைவிட வேகமானது. 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் கோவிட்டுக்கு எதிராக நமக்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதபோது வேகமாகப் பரவிய அசல் கொரோனா நச்சுயிரியோடு இதை ஒப்பிடலாம்.

நச்சுயிரியால் பாதிக்கப்படுவதற்கும் அதை வேறு ஒருவருக்குப் பரப்புவதற்கும் இடையில் மிகவும் குறுகிய இடைவெளி இருக்கலாம். அதிவேக வளர்ச்சி ஆற்றலின் காரணமாக, சிறிய எண்ணிக்கை விரைவில் பெரியளவில் பெருகும். ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்போது, மாத இறுதிக்குள் ஒரு நாளைக்குச் சுமார் 2,500 நோயாளிகள் என்பது 10,000-ஐத் தாண்டும்.

பட மூலாதாரம், Getty Images

என்னையும் ஒமிக்ரான் தாக்குமா? நோய்வாய்ப்படுவேனா?

ஆய்வாளர்கள், முதன்முதலில் ஒமிக்ரானிலுள்ள மரபணுப் பிறழ்வுகளின் பட்டியலைப் பார்த்ததிலிருந்து இருக்கும் கவலை என்னவெனில், அது தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கிறது. தடுப்பூசிகளை உருவாக்கப் பயன்படுத்திய அசல் கொரோனா நச்சுயிரிடமிருந்து இது மிகவும் வேறுபட்டுள்ளது, என்று கண்டறிந்தனர்.

நோய் எதிர்ப்பொருட்களைப் பயன்படுத்தும் சோதனையிலிருந்து நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் எவ்வாறு நிலைத்து நிற்கும் என்பது பற்றிய முதல்கட்ட தரவு இப்போது உள்ளது. இவை கொரோனா நச்சுயிரியின் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்கின்றன. அப்படி ஒட்டிக்கொண்டு அணுக்களை அது பாதிக்காமல் தடுக்கிறது.

இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்களின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பொருட்கள், நச்சுயிரியின் திறனை 20 முதல் 40 மடங்கு குறைப்பதாக இதுவரையிலான ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் ஆய்வுகளின் முடிவுகள் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்பதை எளிதில் சொல்லிவிட முடியாது. ஆனால், குறைவான பாதுகாப்பையே நல்கும் நோய் எதிர்ப்பொருட்களால், ஒமிக்ரான் அதிகம் பரவும் ஆபத்தும் ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான், ஒரு நற்செய்தி வந்தது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் பரிசோதனைகளின் மூலம், மூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பொருட்களின் அளவைப் பெருமளவில் அதிகரிப்பதைக் காட்டுகிறது. முந்தைய கோவிட் நச்சுயிரிக்கு எதிராக முந்தைய இரண்டு டோஸ்களும் செய்ததைப் போலவே, ஒமிக்ரானுக்கு எதிராக மூன்றாவது டோஸ் செய்யும் என்று பரிசோதனை முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா.எலினோர் ரிலே, "இதுவரையிலான தரவுகள் உறுதியளிக்கிறது. பூஸ்டர் போட்டுக்கொள்வது கடுமையான நோய்த்தொற்றுக்கு எதிராக அதிகளவிலான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று பரிசோதனை முடிவுகள் அறிவுறுத்துகின்றன," என்று விவரிக்கிறார்.

ஒமிக்ரான் தொற்று எவ்வளவு கடுமையானது என்பது குறித்து இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.

படக்குறிப்பு,

ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன.

ஆனால், ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டிருந்தாலோ அல்லது கடந்த காலத்தில் தொற்று ஏற்பட்டிருந்தாலோகூட, இந்தத் தொற்றின் தொடக்கத்தில் அதை எதிர்த்துப் போராடிய உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு இன்னும் சிறந்த நிலையிலிருக்கும்.

நோய் எதிர்ப்பொருட்கள் உடல் பாதுகாப்பின் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. மேலும், அவை பூஸ்டர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவரை பரந்த, சிக்கலான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரேயொரு கூறு மட்டும்தான்.

ஒருவர் தொற்றுக்கு ஆளான பிறகு, நோய் எதிர்ப்பொருட்களைவிட, டி-செல்கள் நச்சுயிரியை அதிகம் கவனிக்கின்றன. ஆகவே, அவை புதிய திரிபுகளிடமிருந்து எளிதில் தவிர்க்கப்படுகின்றன.

ஆனால், ஒமிக்ரானால் ஏற்படும் நோய் எவ்வளவு கடுமையானது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள, யாரெல்லாம் அதற்குப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவேண்டும்.

ஒமிக்ரான் திரிபினால் என்ன நடக்கலாம்?

ஒமிக்ரான் அலை உருவாவது, தடுப்பூசிகள் பெரும்பாண்மை மக்களைத் தீவிர நோய்வாய்ப்படுதலில் இருந்து தடுப்பது ஆகிய இரண்டுக்குமே சாத்தியக்கூறுகள் உள்ளன.

"நம்மில் பெரும்பாலோர்" முற்றிலும் நன்றாக இருந்தாலும்கூட, "அனைவரும்" நன்றாக இல்லை என்பதுதான் பிரச்னை. நம்மில் சிலர் பலவீனமானவர்கள். சிலருக்கு தடுப்பூசிக்கு நன்கு செயலாற்றும் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு இல்லை. சிலருக்குத் தடுப்பூசி போடமுடியாது. சிலர் தடுப்பூசி போடவேண்டாம் என்று தேர்வு செய்துள்ளார்கள்.

டெல்டா திரிபு மற்றும் கோவிட் தொற்றுநோய்க்கு இன்னும் மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் நபர்களிடையே இதைப் பார்க்கிறோம்.

ஓர் அலை திடீரென, ஒரே நேரத்தில் தொடங்கினால், சிகிச்சை தேவைப்படுகிற இத்தகைய மக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கவனிக்க வெண்டிய சூழல் ஏற்படும்.

"இது அனைத்தையும் ஒன்றாக இணைக்கிறது," என்கிறார் வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் டில்டெஸ்லி. "ஆகவே, ஜனவரியில் இருந்ததைப் போன்ற ஒரு பெரிய அலை உருவாகும் வாய்ப்புள்ளது. ஒரு கட்டத்தில் அது மருத்துமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்."

ஆனால், இதுவரையிலான அனைத்து தரவுகளிலுமே இன்னமும் பெரியளவு நிச்சயமற்ற தன்மை இருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.

ஒமிக்ரான் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, எவ்வளவு தீவிரமானது அல்லது தடுப்பூசியின் செயல்பாட்டைத் தவிர்க்கிறது என்பதற்கான உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் இல்லை. எனவே கணித மாதிரிகளில் எந்தத் தரவுகள் செருகப்படுகின்றன என்பதைப் பொறுத்து வரும் வாரங்களில் முற்றிலுமாக மாறுபட்ட பார்வையைப் பெறுவீர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: