மூழ்கிய கப்பல்: தேடும் பணிகளில் பெரும் சிரமங்கள்

தென்கொரியாவில் 475 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலில் ஆட்களை மீட்கும் பணி, மோசமான காலநிலை, வலுவான நீரோட்டம், கலங்கலான நீர் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.
179 பேர் உயிருடனும் 9 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர் என்றாலும் எஞ்சியுள்ள 287 பேரின் கதி பற்றி இன்னும் எதுவும் உறுதிசெய்யப்பட்டிருக்கவில்லை.
நூற்றுக்கணக்கான பள்ளிப் பிள்ளைகளோடு கடலில் மூழ்கிய கப்பலில் கடைசி சில மணி நேரங்களில் என்னென்னவெல்லாம் நடந்தது என்பதை உன்னிப்பாக ஆராய்ந்துவருவதாக தென்கொரிய கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மூழ்குவது தெரிந்தும் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதையும், தப்பிப்பதற்கான படகுகளை தண்ணீரில் இறக்குவதையும் கப்பல் ஊழியர்கள் தாமதப்படுத்திவிட்டார்கள் என்று வெளியாகியுள்ள தகவல்களை அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை.
இந்நிலையில் பரிதவிக்கும் உறவினர்களை அருகில் உள்ள துறைமுகம் ஒன்றில் வைத்து தென்கொரிய அதிபர் பாக் கென்ஹெய் அம்மையார் சந்தித்துள்ளார்.