காவிரி வழக்கு கடந்து வந்த பாதை!

பட மூலாதாரம், STR
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை முடிவில்லாமல் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக காவிரி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால், 192 டி எம் சி தண்ணீர் போதாது என்றும், கூடுதலாக 50 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீர் தர முடியாது அதனை 132 டி எம் சியாக குறைக்க வேண்டும் என்று கோரி மேல் முறையீடு செய்தது.
தமிழக அரசைப் போல கேரளா மற்றும் புதுச்சேரியும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. முன்னதாக இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க, இந்த வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர்.

1990 - வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
1991 - மேட்டூர் அணைக்கு 205 டி எம் சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நடுவர் மன்றம்.
1998 - ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்கு காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பு.
2007 - தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு.
2013- மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.

தீர்வு காண அமைக்கப்பட்ட நடுவர் மன்றம்
1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு, 1990ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணைக்கு 205 டிஎம்சி திறந்துவிட வேண்டும் என அடுத்த ஆண்டே நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடகத்தில் பெரும் போராட்டம் வெடிக்க தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆறு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 1998ல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இப்பிரச்சனை புகைந்து கொண்டே இருந்தது.
இறுதியில், தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பு அளித்தது. ஆறு ஆண்டுகள் கழித்து 2013 ஆம் ஆண்டு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்