வேலூர் தேர்தல் ரத்து தள்ளுபடி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் கே.சுகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை நிறுத்திவைத்தது செல்லும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று எண்.8 வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்தார்.

கடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுவதால் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இரு நாட்களுக்குப் பிறகு, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் சிமென்ட் குடோனிலிருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

சோதனை நடத்தப்பட்ட தினத்தன்று இது குறித்துக் கருத்துத் தெரிவித்த துரை முருகன், தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும் தங்களைத் தேர்தல் களத்தில் சந்திக்க முடியாதவர்கள் இம்மாதிரி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை ஜனநாயகப் படுகொலை என்று கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், வேட்பாளர் மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :