மோசடி வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது - 2020ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் கீழ் நடவடிக்கை

மாரிதாஸ்

பட மூலாதாரம், @MARIDHASANSWERS TWITTER HANDLE

ட்விட்டரில் அவதூறான கருத்தைத் தெரிவித்ததால் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள யு ட்யூபரான மாரிதாஸ் மோசடி வழக்கு ஒன்றில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பா.ஜ.க. ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

டிசம்பர் 9ஆம் தேதி காலையில் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் கீழ் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு எண் 253/2020 வழக்கிற்காக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி தன்னுடைய யு டியூப் சேனலில் வீடியோ ஒன்றை மாரிதாஸ் வெளியிட்டார். அந்த வீடியோவில் சென்னையிலிருந்து இயங்கிவரும் தனியார் சேனல் ஒன்று கடந்த நான்கு ஆண்டுகளாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் தி.க. மற்றும் தி.மு.க. ஆதரவாளர்களால் சேனல் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அந்த சேனலின் தலைமையகத்திற்கு அனைவரும் மின்னஞ்சல் அனுப்பவேண்டுமென்றும் கூறினார். இதற்குப் பிறகு ஜூலை 10ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மின்னஞ்சல் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்ட மாரிதாஸ், தான் சொன்ன குற்றச்சாட்டுகளை சேனல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் அன்று வெளியிட்ட யூ ட்யூப் வீடியோவிலும் இதே தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த தனியார் சேனலின் சார்பில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அது போன்ற எந்த மின்னஞ்சலையும் தாங்கள் அனுப்பவில்லையென அந்த நிறுவனம் கூறியது. போலியான ஒரு ஆவணத்தை மாரிதாஸ் தயாரித்து வெளியிடிருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்தப் புகாரில் கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சட்டப் பிரிவுகள் 465 (மோசடி செய்வது), 469 (நற்பெயரைக் கெடுப்பதற்காக மோசடி செய்வது), 471 IPC (மோசடி செய்யப்பட்ட ஆவணத்தையோ, எலெக்ட்ரானிக் ஆவணத்தையோ பயன்படுத்துவது), 66B r/w 43 IT Act 2008 கம்ப்யூட்டரிலோ, நெட்வொர்க்கிலோ சோதத்தை ஏற்படுத்துவது) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அந்த வழக்கில்தான் மாரிதாஸ் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, காஷ்மீர் குறித்து சர்ச்சை ட்வீட்

டிசம்பர் 9ஆம் தேதியன்று காலையில் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து டிசம்பர் 9அன்று பிற்பகல் மாரிதாஸை அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்தனர்

விசாரணைக்காக தங்களுடன் காவல்நிலையத்திற்கு வரும்படி மாரிதாஸை அழைத்தபோது, அவர் "தன்னை விசாரணைக்கு அழைக்க சம்மன் இருக்கிறதா?" என்று கேள்வியெழுப்பினார்.

இதற்குள் மாரிதாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் வந்த தகவலை அறிந்து மாரிதாஸ் வீட்டின் முன்பாக பா.ஜ.கவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்தனர். அங்கிருந்த காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு காவல்துறையினர் மாரிதாஸை கே. புதூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் மாரிதாஸ் மீது சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: