இந்தியாவுக்கு கடத்தப்படயிருந்த 5 கிலோ தங்கம் இலங்கையில் பிடிபட்டது
இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் படகொன்றில் இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்படயிருந்ததாகத் தெரிவிக்கப்படும் 5 கிலோ தங்கத்தை கடற்படையினர் ஞாயிறன்று கைப்பற்றியுள்ளனர்.
மீனவர்களை போன்று வேடமிட்டு, இந்தக் கடத்தலை மேற்கொண்ட இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ள கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய படகையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 கிலோ தங்கமும், படகும், சந்தேக நபர்களும் மேல் விசாரணைக்காகவும் நடவடிக்கைக்காகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.