இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டும் 7.3 சதவீதம் வளர்ச்சியைக் காணும் என உலக வங்கி கூறியுள்ளது குறித்து மாற்றுக் கருத்துக்கள் வந்துள்ளன.
தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகளில் செய்யப்படும் முதலீடுகள் காரணமாகவே இந்த வளர்ச்சி சாத்தியப்படும் எனவும் உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.
ஆனால் உலக வங்கியின் இந்தக் கணிப்பீடு யதார்த்தமானது அல்ல என்று இலங்கை பொருளாதார ஆய்வாளர் டாக்டர் முத்துகிருஷ்ண சர்வானந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகள் அரசு கொடுக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே தமது கணிப்பீடுகளைச் செய்கின்றன எனக் கூறும் அவர், அரசின் தரவுகள் குறித்து சந்தேகங்களும் கேள்விகளும் எழும் நிலையில் எவ்வாறு உலக வங்கியின் எதிர்வுகூறலில் யதார்த்தம் இருக்க முடியும் எனவும் கேட்கிறார்.
போர் காலத்தில் கூட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் அல்லது அதற்கு சற்று கூடுதலாக இருந்தது என்றும், போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் 7. 3 சதவீத வளர்ச்சி என்பதை பெரிய முன்னேற்றமாக கருத முடியாது எனவும் டாக்டர் சர்வானந்தன் கூறுகிறார்.
நாட்டின் மூன்று மாகாணத்தில் மட்டுமே உட்கட்டமைப்புகள் உட்பட பல பொருளாதார வளர்ச்சிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளன என்றும், வடகிழக்கு உட்பட நாட்டின் பெரும்பாலானப் பகுதிகளில் அத்தகைய வளர்ச்சியை காண முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் நேரடிப் பயன்கள் இன்னும் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை எனவும் அவர் கூறுகிறார்.